எம் வி வெங்கட்ராமின் காதுகளும்  ஜெயமோகனின் 'அறமும்

           ஜெயமோகனின் 'அறம்' தொகுதியில் முதல் கதையில்  (அறப் ) பாடு  பாடும் எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் எனவும் (courtesy youtube கதை
சொல்லி பவா செல்லதுரை ) மேலும் அவர் கும்பகோணத்தில் வசித்தவர் என்பதாலும் அவர் எழுத்துகளை படிக்க ஒரு கூடுதல் ஆர்வம் வந்து விட்டிருந்தது. அறம் சிறு கதையில் 'சத்தங்கள்' என அவரின் காதுகள் நாவல் பற்றி சொல்லப் பட்டு இருக்கும். மேலும் அது  சாகித்ய அகாடமி பரிசும் பெற்றது என தெரிந்த உடன், அதை படித்தே ஆக வேண்டும் என வாங்கி வாசித்ததில் சற்றே இலக்கியத்தில் இருந்து விலகி சில நாட்களாகவே சினிமாவிற்குள் இருந்த என்னை  மீண்டும் இலக்கிய மற்றும் சீரியஸ் வாசிப்பு பக்கம் இந்த புத்தகம் தள்ளி விட்டதாக கூற வேண்டும்.

         எம் வி வெங்கட்ராம் அவர்களின் சொந்த வாழ்க்கையே கதையாக
இருந்ததும், நாவலின் களம் தினம் நான் புழங்கி கொண்டு இருக்கும் குடந்தை என்பதும் சுவாரஸ்யத்தை கூட்டியது. எம் வி வி  அவர்களின் புதினங்களில் நான் வாசிக்கும் முதல் நூல் 'காதுகள்'. பொதுவாக அமேசான் கிண்டிலில் படிக்கும் நான் ஒரு paperpack வடிவில் காசு கொடுத்து புத்தகம் வாங்கியதில் ஒரு திருப்தியும் பட்டு கொள்ள முடிந்தது.

           நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரம்  "டின்னிடஸ்" எனும்
காதில் சத்தம் வரும் வியாதியால் அவதி பட்டு கொண்டு இருக்கும் .
அந்த வியாதி அவருக்கு வந்ததற்கான காரணத்தை  அந்த  நாவலில்
எம் வி வி அவர்கள்   எங்கும் கூறி இருப்பதாக தெரிய வில்லை. ஆனால் ஜெயமோகனின்  'அறம்' சிறுகதையில் எம் வி வி அவர்களுக்கு காதுகளுக்கு வந்த வியாதிக்கான காரணத்தை சொல்வதாக ஓரிடத்தில் வருவதை நாம் பார்க்கலாம்.
//' ..... ராத்திரி முழுக்க அங்கேயே நின்னேன். எப்டி நின்னேன் எதுக்கு
நின்னேன் ஒண்ணுமே தெரியல. காதுல நொய் னு ஒரு சவுண்டு வருது .
பின்னாடி ஒரு அந்த சத்தம் பெரிய சிக்கலா ஆச்சுன்னு வைங்க ..சத்தங்கள்
வாசிச்சிருப்பிங்க' ......// இதை கதையில் வரும் பெரியவர் செட்டியார் தம்பியிடம் அறை வாங்கிய பின்னர் சொல்வதாக வரும்.

         இந்த நாவலின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து வருவது டின்னிடஸ்
என்ற நவீன மருத்துவத்தில் நல்ல தீர்வாக எதுவும்  இல்லாத  ஒரு காது
இரைச்சல் பிரச்சனை  அந்த வியாதியை பற்றி முன்பே கேள்வி பட்டும் படித்தும் இருக்கிறேன். அது படுத்தும் பாட்டை பற்றியெல்லாம் நெருங்கிய ஒருவரிடத்தும்  கேட்டும் இருப்பதால் அதைப் பற்றிய ஆர்வம்  கொஞ்சம் எனக்கு உண்டு . எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இணைய தளத்தில் இதை பற்றிய  சில அனுபவ கட்டுரைகளும் படித்து இருக்கிறேன்  பொதுவாக டின்னிடஸ் சிக்கல் இருப்பவர்கள் கூறும் அனுபவத்தை விட ஒரு வித்தியாசமான அனுபவம் இந்த நாவலில் உள்ளது. எம் வி வி அவர்கள் தன் வாழ்க்கை கதையை ஒரு சுவாரஸ்யத்திற்காக தனது காது இரைச்சல் அனுபவத்தை நாவலுக்காக மிகைப் படுத்தி சொல்லி இருப்பாரா  தெரியவில்லை. ஆனால் இந்த காது இரைச்சல் அர்த்தமில்லாத ஒன்றாக இல்லாமல் பல நேரங்களில் அவரது காதிற்குள் ஒரு நாடகம் நடப்பது போல இருக்கும் என சொல்கிறார். ஆச்சர்யமான விஷயம் அந்த உரையாடல்களை எல்லாம் அப்படியே விவரித்து எழுதுகிறார்.அறிவியல் அதனை auditory hallucination என்று குறிப்பிடுகிறது. ....பல சிக்கல்களுக்கு மருத்துவ அறிவியல் தீர்வு காண்கிறதோ இல்லையோ பெயர் முதலில் வைத்து விடும்.

         இந்த மாதிரியான ஒரு பயங்கர வியாதியை கூட ஒரு சுவரஸ்யமான
புத்தகமாக ஆக்க ஒரு தேர்ந்த இலக்கியவாதியால் மட்டுமே முடியும்.
ஸ்கிசோபெர்னியாவின் ஆரம்பகட்ட அறிகுறிகள் (auditory hallucination பற்றி மருத்துவ உலகம் சொல்வது ) எல்லாம் இருந்த போதிலும்
அதில் முழுவதும் வீ ழ்ந்து விடாமல் அவரை இலக்கிய பணியும் வாசிப்பும்
காப்பாற்றி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஸ்டீபன்  ஹாக்கின்ஸ்
போல மனம் மூலம் உடல் தாண்டி சென்ற வெற்றியாளராக கூட எம் வி வி
எனக்கு தெரிகிறார்.

         சின்ன பிரச்னைகளுக்கே சோர்ந்து விடுபவர் மத்தியில்  24 மணி நேரமும்
காதில் சம்பந்தம் இல்லாத கச்சேரி என்ற மண்டை குடைச்சலோடு பல சிறப்பான இலக்கிய தரம் உள்ள படைப்புக்களையும் கொடுத்துள்ள எம் வி வி அவர்கள்  ஒரு சிறப்புக்குரிய தமிழ் இலக்கிய ஆளுமையாக என்றும்  நினைவு
கூற தக்கவர்.

                                         &&&&&&&&&&&&&&&&&&&



       
                   
.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்